We Believe JesusFé, Esperança e Nova Vida

எசேக்கியேல் 10

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எசேக்கியேல் 9 எசேக்கியேல் எசேக்கியேல் 11 →

1நான் பார்த்தபோது, கேருபீன்களின் தலைகளுக்கு மேலாக இருந்த ஆகாய வெளியில், அரியணைபோன்ற ஒன்றைக் கண்டேன். அது நீலரத்தினத்தாலான அரியணைபோல் இருந்தது.

2யெகோவா மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனிடம், “நீ கேருபீன்களுக்குக் கீழேயிருக்கும் சக்கரங்களுக்கிடையே போ. அங்கே கேருபீன்கள் மத்தியிலிருந்து நெருப்புத் தணலை உனது கைநிறைய அள்ளி, பட்டணத்தின் மீது தூவு” என்றார். நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவன் உள்ளே போனான்.

3அந்த மனிதன் உள்ளே சென்றபோது, கேருபீன்கள் ஆலயத்தின் தென்புறமாக நின்றன; ஒரு மேகம் உள்முற்றத்தை நிரப்பியிருந்தது.

4யெகோவாவினுடைய மகிமை கேருபீன்களின் மேலிருந்து எழும்பி, ஆலய வாசற்படியை நோக்கி வந்தது. மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. முற்றம் யெகோவாவினுடைய மகிமையின் பிரகாசத்தினால் நிறைந்தது.

5கேருபீன்களின் சிறகுகளின் சத்தம் வெளிமுற்றம்வரை கேட்கக்கூடியதாய் இருந்தது. அது எல்லாம் வல்ல இறைவன் பேசுகிறபோது ஒலிக்கும் குரல்போல் இருந்தது.

6யெகோவா மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனிடம், “கேருபீன்களுக்கு நடுவிலிருக்கும் சக்கரங்களின் இடையிலிருந்து நெருப்பை எடு” எனக் கட்டளையிட்டார். உடனே அம்மனிதன் உள்ளே போய் ஒரு சக்கரத்தினருகே நின்றான்.

7பின்பு கேருபீன்களில் ஒருவன், தங்களுக்கு நடுவே இருந்த நெருப்புக்குள் தன் கையை நீட்டி அதில் கொஞ்சம் எடுத்து, அதை மென்பட்டு உடை உடுத்தியிருந்த மனிதனின் கைகளில் கொடுத்தான். அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியிலே வந்தான்.

8கேருபீன்களுடைய சிறகுகளின்கீழ் மனித கைகள் போன்றவை காணப்பட்டன.

9நான் பார்த்தபோது கேருபீன்களுக்கு அருகில் நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு கேருபீனின் அருகிலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் பத்மராகம்போல பளிச்சிட்டன.

10பார்வைக்கு அவை நான்கும் ஒரே மாதிரி தோற்றமளித்தன. அந்தச் சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்குள் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுபோல் தோற்றமளித்தன.

11அவை நகர்ந்தபோது, கேருபீன்கள் நோக்கிக்கொண்டிருந்த நான்கு திசைகளில் ஏதாவது ஒன்றை நோக்கிப்போயின. கேருபீன்கள் போனபோது, சக்கரங்கள் சுழன்று திரும்பவில்லை. கேருபீன்களின் தலை எத்திசையை நோக்கினதோ அதே திசையில் அவையும் திரும்பாமலே சென்றன.

12அவைகளின் முதுகுகள், கைகள், சிறகுகள் அனைத்தும் உள்ளடங்க உடல் முழுவதும் கண்களால் நிறைந்திருந்தன. அப்படியே அந்த நான்கு சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன.

13அச்சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என அழைக்கப்பட்டதை நான் கேட்டேன்.

14கேருபீன்கள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதலாவது முகம் கேருபீன் முகமாகவும், இரண்டாவது மனித முகமாகவும், மூன்றாவது சிங்க முகமாகவும், நான்காவது கழுகு முகமாகவும் இருந்தன.

15பின்பு கேருபீன்கள் மேலே எழும்பின. கேபார் நதியருகே நான் கண்ட உயிரினங்கள் இவையே.

16கேருபீன்கள் செல்லுகையில் அவைகளினருகே இருந்த சக்கரங்களும் சென்றன. கேருபீன்கள் நிலத்திலிருந்து எழும்புவதற்காகத் தங்கள் இறகுகளை விரிக்கும்போது, சக்கரங்கள் அவைகளைவிட்டு விலகவில்லை.

17கேருபீன்கள் அசையாது நிற்கையில், அவைகளும் அசையாது நின்றன. கேருபீன்கள் எழும்புகையில் அவைகளும் எழும்பின. ஏனெனில் வாழும் உயிரினங்களின் ஆவி அவைகளில் இருந்தது.

18பின்பு யெகோவாவினுடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியை விட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நிறுத்தப்பட்டது.

19நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்கள் தங்கள் இறகுகளை விரித்து நிலத்தை விட்டு எழும்பின. அவை செல்லுகையில், சக்கரங்களும் அவைகளோடு சென்றன. அவை யெகோவாவின் ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நின்றன. இஸ்ரயேலின் இறைவனுடைய மகிமை அவைகளுக்கு மேலாக இருந்தது.

20கேபார் நதியருகே இஸ்ரயேலின் இறைவனுக்குக் கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. எனவே அவை கேருபீன்கள் என உணர்ந்துகொண்டேன்.

21ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு சிறகுகளும் இருந்தன. சிறகுகளின் கீழே மனித கைகள் போன்றவை இருந்தன.

22அவைகளின் முகங்கள் கேபார் நதியருகே நான் கண்ட அதே தோற்றத்தைக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் நேர்முகமாகவே முன்னேறிச் சென்றன.

← எசேக்கியேல் 9 எசேக்கியேல் எசேக்கியேல் 11 →

எசேக்கியேல் 10 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்