We Believe JesusFé, Esperança e Nova Vida

யாத்திராகமம் 29

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← யாத்திராகமம் 28 யாத்திராகமம் யாத்திராகமம் 30 →

1“அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்வதற்கு நீ செய்யவேண்டியது இதுவே: குறைபாடற்ற ஒரு இளங்காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

2சிறந்த கோதுமை மாவினால் புளிப்பில்லாத அப்பத்தையும், எண்ணெய் சேர்த்துப் பிசைந்த அடை அப்பங்களையும், எண்ணெய் கலந்த அதிரசங்களையும் செய்யவேண்டும்.

3அவற்றை ஒரு கூடையில் வைத்து, அந்தக் காளையுடனும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களுடனும் காணிக்கையாகக் கொடுக்கவேண்டும்.

4பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவவேண்டும்.

5உடைகளை எடுத்து, உள் அங்கி, ஏபோத்துடன் அணியும் அங்கி, ஏபோத், மார்பு அணி ஆகியவற்றை ஆரோனுக்கு உடுத்தவேண்டும். அத்துடன் திறமையாய் நெய்யப்பட்ட இடைப்பட்டியினால் ஏபோத்தை அவனுக்குக் கட்டவேண்டும்.

6அவனுடைய தலையில் தலைப்பாகையையும் அணிவித்து, அதன்மேல் பரிசுத்த தங்கக்கீரிடத்தையும் வைக்கவேண்டும்.

7பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, அவன் தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும்.

8அதன்பின், அவனுடைய மகன்களை வரவழைத்து, அவர்களுக்கும் உள் அங்கிகளை அணிவிக்கவேண்டும்.

9அவர்களுக்கும் குல்லாக்களை அணியவேண்டும். பின் இடைப்பட்டிகளை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கட்டவேண்டும். ஆசாரியத்துவம் ஒரு நிரந்தர நியமத்தினால் அவர்களுக்கு உரியதாயிருக்கிறது.

10“அதன்பின் சபைக் கூடாரத்தின் முன்பாக காளையைக் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைக்கவேண்டும்.

11பின் சபைக் கூடாரத்தின் வாசலில் யெகோவா முன்னிலையில் அக்காளையை கொல்லவேண்டும்.

12அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, உன் கை விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மிஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றவேண்டும்.

13பின்பு அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்புகள் அனைத்தையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும், இரண்டு சிறுநீரகங்களையும், அதன் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.

14ஆனால் காளையின் இறைச்சியும், தோலும், குடலும் முகாமுக்கு வெளியே எரிக்கப்படவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.

15“அதன்பின் செம்மறியாட்டுக் கடாக்களில் ஒன்றைக் கொண்டுவர வேண்டும். அதன் தலைமேல் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.

16பின்பு அதைக் கொன்று, அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.

17அந்த செம்மறியாட்டுக் கடாவை துண்டங்களாக வெட்டி, அதன் உட்பாகங்களையும், கால்களையும் கழுவி, அவற்றை மற்ற இறைச்சித் துண்டுகளுடனும், அதன் தலையுடனும் வைக்கவேண்டும்.

18அதன்பின் செம்மறியாடுகள் முழுவதையும் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகும்.

19“பின்பு மற்ற செம்மறியாட்டுக் கடாவையும் கொண்டுவர வேண்டும். ஆரோனும் அவன் மகன்களும் அதன்மேல் தங்கள் கைகளை வைக்கவேண்டும்.

20அந்தக் கடாவையும் வெட்டிக்கொன்று, அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை ஆரோனுடைய, அவன் மகன்களுடைய வலது காது மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசவேண்டும். பின்பு இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.

21பலிபீடத்திலுள்ள இரத்தத்திலும், அபிஷேக எண்ணெயிலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன் மேலும் அவன் உடைகளின்மேலும், அவன் மகன்கள்மேலும், அவர்களுடைய உடைகள்மேலும் தெளிக்கவேண்டும். அதன்பின் அவனும், அவன் மகன்களும் அர்ப்பணிக்கப்படுவார்கள். அவர்களுடைய உடைகளும் அர்ப்பணிக்கப்படும்.

22“அந்தச் செம்மறியாட்டின் கொழுப்பையும், அதன் கொழுத்த வாலையும், அதன் உள் உறுப்புகளை மூடியுள்ள கொழுப்பையும், ஈரலின் மேலுள்ள கொழுப்பையும், இரு சிறுநீரகங்களையும், அவற்றை மூடியுள்ள கொழுப்பையும், வலது தொடையையும் எடுக்கவேண்டும். இதுவே ஆரோனுடைய அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடா.

23அவற்றுடன் யெகோவா முன்பாக வைக்கப்பட்டிருந்த புளிப்பில்லாத அப்பங்களுள்ள கூடையிலிருந்து ஒரு அப்பத்தையும், எண்ணெய் சேர்த்து சுடப்பட்ட ஒரு அடை அப்பத்தையும், ஒரு அதிரசத்தையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

24அவற்றையெல்லாம் ஆரோனுடைய, அவன் மகன்களுடைய கைகளில் கொடுத்து, அவற்றை யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.

25பின்பு அவற்றை அவர்களின் கைகளிலிருந்து வாங்கி, பலிபீடத்தின் மேலுள்ள தகன காணிக்கைகளுடன் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக எரிக்கவேண்டும்.

26ஆரோனின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவின் நெஞ்சுப்பகுதியை எடுத்து, பின்பு அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். இது உன் பங்காயிருக்கும்.

27“ஆரோனுடைய, அவன் மகன்களுடைய அர்ப்பணிப்பிற்குரிய செம்மறியாட்டுக் கடாவின் பாகங்களாகிய அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் மிகவும் பரிசுத்தமான பங்காக வேறுபிரித்து வைக்கவேண்டும்.

28இஸ்ரயேலர்கள் சமாதான காணிக்கைகளையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவுக்குச் செலுத்தும் போதெல்லாம் இந்தப் பாகங்கள் ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் கொடுக்கப்படவேண்டிய பங்கு ஆகும்.

29“ஆரோனின் பரிசுத்த உடைகள் அவனுடைய சந்ததிக்கு, அவர்கள் அவற்றை உடுத்தி அபிஷேகம் பண்ணப்பட்டு, அர்ப்பணிக்கப்படும்படி அவர்களுக்கே சொந்தமாகும்.

30அவனுக்குப்பின் அவனுக்குரிய இடத்தில் ஆசாரியராக பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்வதற்கு சபைக் கூடாரத்திற்குள் வரும், அவனுடைய மகன் அந்த உடைகளை ஏழு நாட்கள் உடுத்தவேண்டும்.

31“ஆசாரியரின் அர்ப்பணிப்பிற்கான செம்மறியாட்டுக் கடாவை எடுத்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கவேண்டும்.

32ஆரோனும் அவன் மகன்களும், அந்த இறைச்சியையும், கூடையிலுள்ள அப்பங்களையும் சபைக்கூடார வாசலில் சாப்பிடவேண்டும்.

33பரிசுத்தப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புக்கும் பாவநிவிர்த்தியாக செலுத்தப்பட்ட அக்காணிக்கைகளை அவர்களே சாப்பிடவேண்டும். அவைகளை வேறு யாரும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் அவைகள் பரிசுத்தமானவை.

34அர்ப்பணிப்பிற்கான அந்த செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியிலோ அல்லது அப்பங்களிலோ காலைவரை ஏதாவது மீதமிருந்தால், அவற்றை எரித்துவிடவேண்டும். ஏனெனில் அவை பரிசுத்தமானது, அவற்றைச் சாப்பிடக்கூடாது.

35“ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்யவேண்டும். அதைச் செய்வதற்கு ஏழு நாட்கள் எடுத்துக்கொள்.

36ஒவ்வொரு நாளும் பாவநிவிர்த்தி செய்யும்படி, பாவநிவாரண காணிக்கையாக ஒரு காளையைப் பலியிடவேண்டும். பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து அதைப் பரிசுத்தப்படுத்து. அதை அர்ப்பணம் செய்வதற்காக எண்ணெயால் அபிஷேகம் செய்து பரிசுத்தப்படுத்து.

37பலிபீடத்திற்காக ஏழுநாட்களுக்கு பாவநிவிர்த்தி செய்து அதை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும். அதைத் தொடுவது எதுவானாலும் அது பரிசுத்தமாகும்.

38“ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக ஒரு வயதுடைய இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளை பலிபீடத்தில் பலியாகச் செலுத்தவேண்டும்.

39காலையில் ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும், பொழுது மறையும்போது மற்ற செம்மறியாட்டுக் குட்டியையும் செலுத்தவேண்டும்.

40முதல் செம்மறியாட்டுக் குட்டியுடன் பத்தில் ஒரு எப்பா29:40 அதாவது, சுமார் 1.6 கிலோகிராம் அளவான சிறந்த மாவை, நான்கில் ஒரு பங்கு ஹின்29:40 அதாவது, சுமார் 1 லிட்டர் அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயிலே பிசைந்து, அதையும் நான்கில் ஒரு ஹின் அளவான திராட்சை இரசத்தையும் பானகாணிக்கையாகச் செலுத்தவேண்டும்.

41சூரியன் மறையும் வேளையிலும் காலையில் எடுத்த அதே தானியக் காணிக்கையுடனும், அதற்குரிய பானகாணிக்கையுடனும், மற்ற செம்மறியாட்டுக் குட்டியை, யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் மகிழ்ச்சியூட்டும் நறுமண காணிக்கையாக பலியிடவேண்டும்.

42“நீங்கள் இந்த தகன காணிக்கையை தலைமுறைதோறும் சபைக் கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்கு முன்பாக என்றென்றும் தொடர்ச்சியாகச் செலுத்தவேண்டும். அங்கே நான் உன்னைச் சந்தித்து உன்னோடு பேசுவேன்.

43நான் இஸ்ரயேல் மக்களையும் அங்கேயே சந்திப்பேன். அந்த இடம் எனது மகிமையால் அர்ப்பணிக்கப்படும்.

44“இவ்வாறு சபைக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் நான் அர்ப்பணம் செய்வேன். ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி ஆரோனையும், அவன் மகன்களையும் அர்ப்பணம் செய்வேன்.

45இப்படிச் செய்து இஸ்ரயேலர் மத்தியில் நான் குடியிருந்து அவர்களின் இறைவனாயிருப்பேன்.

46அவர்கள் மத்தியில் குடியிருக்கும்படி, அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த, அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அவர்களுடைய இறைவனாகிய யெகோவா நானே.

← யாத்திராகமம் 28 யாத்திராகமம் யாத்திராகமம் 30 →

யாத்திராகமம் 29 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்