We Believe JesusFé, Esperança e Nova Vida

எஸ்தர் 5

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← எஸ்தர் 4 எஸ்தர் எஸ்தர் 6 →

1மூன்றாம் நாளிலே எஸ்தர் தனது அரச உடைகளை உடுத்திக்கொண்டு அரசனின் மண்டபத்துக்கு முன்பாக அரண்மனையின் உள்முற்றத்தில் நின்றாள். அரசன் வாசலை நோக்கியபடி மண்டபத்திலுள்ள அரச அரியணையில் அமர்ந்திருந்தான்.

2அரசி எஸ்தர் உள்முற்றத்தில் நிற்பதை அவன் கண்டபோது, அவள்மேல் மகிழ்ச்சிகொண்டு தன்னுடைய கையிலிருந்த தங்கச் செங்கோலை அவளை நோக்கி நீட்டினான். எனவே எஸ்தர் கிட்டப்போய் அந்த செங்கோலின் நுனியைத் தொட்டாள்.

3அப்பொழுது அரசன் அவளிடம், “எஸ்தர் அரசியே, என்ன வேண்டும்? உனது வேண்டுகோள் என்ன? அரசில் பாதியாயிருந்தாலுங்கூட அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.

4அதற்கு எஸ்தர், “அரசருக்கு அது பிரியமாயிருந்தால், நான் அரசருக்காக ஆயத்தம் செய்திருக்கிற விருந்துக்கு அரசர் இன்று ஆமானையும் கூட்டிக்கொண்டு வருவாராக” என்றாள்.

5அப்பொழுது அரசன், “எஸ்தர் கேட்டதை நாம் செய்யும்படி, ஆமானை உடனடியாக அழைத்து வாருங்கள்” என்றான்.

6அவர்கள் திராட்சை இரசத்தைக் குடித்துக் கொண்டிருக்கும்போது, அரசன் திரும்பவும் எஸ்தரிடம், “இப்பொழுது உன் விண்ணப்பம் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும். உன் வேண்டுகோள் என்ன? அது அரசின் பாதியாயிருந்தாலும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றான்.

7அப்பொழுது எஸ்தர், “எனது விண்ணப்பமும், எனது வேண்டுகோளும் இதுதான்:

8அரசர் எனக்குத் தயவு காண்பித்து, எனது விண்ணப்பத்தைக் கொடுப்பதற்கும், எனது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்கும் விருப்பமுடையவராக இருந்தால், அரசரும் ஆமானும் நான் நாளைக்கும் ஆயத்தம் செய்யப்போகிற விருந்துக்கு வருவார்களாக. அப்பொழுது நான் அரசனின் கேள்விக்குப் பதிலளிப்பேன்” என்றாள்.

9அந்த நாளில் ஆமான் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் புறப்பட்டுப் போனான். ஆனால் அரசரின் வாசலில் இருந்த மொர்தெகாயைக் கண்டு, மொர்தெகாய் தனக்கு முன்பாக எழுந்திராமலும், தனக்குப் பயப்படாமலும் இருந்ததை கவனித்தபோது, அவன் மொர்தெகாய்க்கு விரோதமாக கடுங்கோபம் கொண்டான்.

10ஆயினும், ஆமான் தன்னை அடக்கிக்கொண்டு, வீட்டுக்குப் போனான்.

11ஆமான் அவர்களிடம் தனது மிகுந்த செல்வத்தைக் குறித்தும், தனது மகன்களைக் குறித்தும், அரசன் தன்னைக் கனப்படுத்திய எல்லா விதங்களைப் பற்றியும், அவர் எவ்விதமாய் தன்னை மற்ற உயர்குடி மனிதருக்கும் அதிகாரிகளுக்கும் மேலாக உயர்த்தியிருக்கிறார் என்பது பற்றியும் பெருமையாய் பேசினான்.

12ஆமான் தொடர்ந்து, “இதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் கொடுத்த விருந்துக்கு அரசனுடன் சேர்ந்து போவதற்கு அவள் அழைத்த ஒரே ஆள் நான் மட்டுமே. அவள் நாளைக்கும் அரசருடன் என்னை அழைத்திருக்கிறாள்.

13ஆயினும் அரச வாசலில் இருக்கும் யூதனான அந்த மொர்தெகாயைக் காணும்போது, இது எல்லாம் எனக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை” என்றான்.

14அவனுடைய மனைவி சிரேஷும், அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனிடம், “எழுபத்தைந்து அடி உயரமான ஒரு தூக்கு மரத்தைச் செய்து, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கிலிடும்படி, அரசனிடம் கேட்டுக்கொள்ளும். பின்பு அரசனுடன் விருந்துக்குப் போய் சந்தோஷமாய் இரும்” என்றார்கள். இந்த யோசனை ஆமானுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் தூக்கு மரத்தைச் செய்துவைத்தான்.

← எஸ்தர் 4 எஸ்தர் எஸ்தர் 6 →

எஸ்தர் 5 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்